ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அடக்குமுறைக்கு எதிராகத் தொடரும் போராட்டங்களில், பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நூற்றுக்கணக்கானோர் முறையான மருத்துவச் சிகிச்சையின்றி தவித்து வருகின்றனர்.
ஈரான் பாதுகாப்புப் படையினர் மருத்துவமனைகளில் புகுந்து காயமடைந்தவர்களின் மருத்துவக் குறிப்புகளைச் (Medical Records) சோதனையிடுவதாகவும், போராட்டக்காரர்களை அடையாளம் கண்டு அங்கேயே கைது செய்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால், காயமடைந்தவர்கள் தங்கள் வீடுகளிலேயே மருத்துவர்கள் மற்றும் தாதியர்களின் உதவியுடன் ரகசியமாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.எங்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாதீர்கள்; அங்கு சென்றால் எங்களைக் கைது செய்துவிடுவார்கள்” என்பதே பெரும்பாலான போராட்டக்காரர்களின் வேண்டுதலாக உள்ளது.
போராட்டக்காரர்கள் மீது சிறிய உலோகக் குண்டுகளைக் கொண்ட துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதால், அவர்களின் உடலில் பல இடங்களில் குண்டுகள் பாய்ந்துள்ளன. அவற்றை வீட்டிலேயே அறுவை சிகிச்சை மூலம் அகற்றும் ஆபத்தான நிலையில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமை அமைப்பான HRANA-வின் தகவல்படி, இதுவரை 6,301 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 11,000-க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.டெஹ்ரானில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் மட்டும் கடந்த சில நாட்களில் 700-க்கும் மேற்பட்டோருக்குக் கண்ணில் குண்டடி பட்டுத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.காயமடைந்த போராட்டக்காரர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களையும் ஈரான் அரசு குறிவைக்கத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக, குவாஸ்வின் (Qazvin) நகரைச் சேர்ந்த பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் அலிரேசா கோல்ச்சினி (Dr Alireza Golchini) போராட்டக்காரர்களுக்குச் சிகிச்சை அளித்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் மீது “கடவுளுக்கு எதிரான பகை” (Moharebeh) என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது; இதற்கு ஈரானியச் சட்டப்படி மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.










