ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில், மறுபுறம் இரு தரப்பும் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் நள்ளிரவில் உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல்வேறு நகரங்களை குறிவைத்து ரஷ்யா ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.
இதில் கீவ்வின் பெச்செர்ஸ்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசாங்க கட்டிடத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தக் கட்டிடம் தீப்பிடித்து எரிந்த நிலையில் உடனே தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்தக் கட்டிடம் உக்ரைனின் அமைச்சரவை கூடும் கட்டிடம் ஆகும்.
மேலும், கீவ்வில் உள்ள ஏராளமான கட்டிடங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குழந்தை உட்பட 3 பேர் பலியானார்கள். 18 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக உக்ரைன் பிரதமர் யூலியா ஸ்வைரிடென்கோ கூறும்போது,”எதிரியின் தாக்குதலால் அரசு கட்டிடத்தின் கூரை மற்றும் மேல் தளங்கள் சேதமடைந்திருப்பது இதுவே முதல் முறை ஆகும்” என்றார்.
அதேபோல் ஒடேசா, கார்கிவ், டினிப்ரோசபோரி ஷியா உள்ளிட்ட நகரங்களிலும் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதற்கு பதிலடியாக ரஷ்யாவின் எண்ணெய் குழாய் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.










