ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது.இதில் 26 பேர் உயிரிழந்தனர் என்றும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பதற்றத்தை தொடர்ந்து வட இந்தியாவில் 200 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் ஸ்ரீநகர், லே, அமிர்தசரஸ் மற்றும் சண்டிகர் உட்பட குறைந்தது 18 விமான நிலையங்கள் இன்று (புதன்கிழமை) தற்காலிகமாக மூடப்பட்டன.
ஜம்மு, பதான்கோட், ஜோத்பூர், ஜெய்சால்மர், சிம்லா, தர்மசாலா மற்றும் ஜாம்நகர் உள்ளிட்ட முக்கிய வடக்கு மற்றும் மேற்கு பகுதி விமான நிலையங்களில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. மேலும் அங்கு பாதுகாப்பு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன.
ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஆகாசா ஏர் மற்றும் பல வெளிநாட்டு விமான நிறுவனங்கள் இந்த பகுதிகளுக்கான சேவைகளை நிறுத்தின.
இண்டிகோ மட்டும் சுமார் 165 விமானங்களை ரத்து செய்தது, அதே நேரத்தில் டெல்லிக்கு செல்லும் மற்றும் புறப்படும் 35 விமானங்கள் நள்ளிரவு முதல் காலை வரை ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானப் போக்குவரத்து அதிகாரிகளின் உத்தரவுகளைத் தொடர்ந்து, ஸ்ரீநகர், ஜம்மு, லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், பூஜ், ஜாம்நகர், சண்டிகர் மற்றும் ராஜ்கோட் ஆகிய இடங்களுக்குச் செல்லும் விமானங்களை மே 10 ஆம் தேதி காலை 5.29 மணி வரை நிறுத்தி வைத்துள்ளதாக ஏர் இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது.