பிரபல நடிகை சமந்தா, விரைவில் வெளியாகவுள்ள ஹாரர் காமெடி திரைப்படமான ‘சுபம்’ மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். தனது புதிய தயாரிப்பு நிறுவனமான த்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் பேனரில் இந்த படத்தை உருவாக்கியதோடு, இதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கியுள்ள இந்த படம், மே 9 ஆம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான டிரெய்லர், ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஹர்ஷித் மல்கிரெட்டி, ஷாலினி கொண்டேபுடி, ஷ்ரியா கொந்தம், ஷ்ரவாணி, சரண் பெரி மற்றும் கவிரெட்டி ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் புரமோஷன் நிகழ்வில் பேசிய சமந்தா, “நடிப்பதைத் தவிர்த்து வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதும் இருந்தது. சிறிது காலம் சினிமாவில் இருந்து ஓய்வெடுத்திருந்த போது, என்னால் மீண்டும் நடிக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. அதுபோன்ற தருணத்தில் தயாரிப்பில் கால் வைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. 15 வருட அனுபவத்துடன் இது சரியான நேரம் என எண்ணினேன்” என கூறினார்.
சமந்தா தயாரித்திருக்கும் முதல் படமாக ‘சுபம்’ திரையரங்குகளில் வரவிருப்பதால், ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.