மன்னார் மாவட்டத்தில் மதியம் 12 மணி வரை 38.43 வீத வாக்குகள் பதிவு-அமைதியான முறையில் வாக்களிப்பு-மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன்.
மன்னார் மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல் வாக்களிப்புக்கள் மிகவும் அமைதியான முறையில் இடம் பெற்று வருகின்ற நிலையில் காலை 7 மணி தொடக்கம் மதியம் 12 மணி வரை 38.43 வீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (6) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல் மிகவும் ,அமைதியாகவும் சுமூகமான முறையிலும் இடம் பெற்று வருகிறது.
மாவட்டத்தில் 91 ஆயிரத்து 373 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 144 வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது.
இன்று செவ்வாய்க்கிழமை(6) மதியம் 12 மணி வரை மன்னார் மாவட்டத்தில் 38.43 வீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
மன்னார் நகர சபை பிரிவில் 34.79 வீத வாக்குகளும்,மன்னார் பிரதேச சபை பிரிவில் 37.02 வீத வாக்குகளும்,நானாட்டான் பிரதேச சபை பிரிவில் 40 வீத வாக்குகளும்,முசலி பிரதேச சபை பிரிவில் 45 வீத வாக்குகளும்,மாந்தை மேற்கு பிரதேச சபை பிரிவில் 36 வீத வாக்குகளும் பதிவாகி உள்ளது.
மதியம் 12 மணி வரை மன்னார் மாவட்டத்தில் 35 ஆயிரத்து 111 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
இது 38.43 வீத வாக்குகளாக காணப்படுகிறது.மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் இன்று வரை 32 தேர்தல் முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
எவ்வித பார தூரமான முறைப்பாடுகள் இல்லை.சாதாரண சட்டத்துடன் தொடர்புடைய முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.மன்னார் மாவட்டத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் தேர்தல் இடம்பெற்று வருகின்றது.