“வவுனியா நகரசபைக்குட்பட்ட காணியில் அமைந்துள்ள தலைமை பொலிஸ் நிலையத்தை அகற்றி அந்த இடத்தில் நவீன வியாபாரத் தொகுதி ஒன்று அமைக்கப்படும்” என வவுனியா மாநகர சபையில் கோடாலிச் சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை குழு வேட்பாளர் சி.கிரிதரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக இன்று (01.05) அவர் மேலும் கருத்து தெரிவித்த போது, “இந்தத் தேர்தலில் பல கட்சிகள் போட்டியிடுகின்றது. அனைவரும் கூறுகின்றனர் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீதியை புனரமைப்போம், வடிகால் அமைப்போம், கழிவகற்றுவோம் என்று. இவையெல்லாம் அந்தந்த சபைகளின் கடமைகள். சபை இருந்தாலும் இல்லாவிடிலும் அது நடந்து கொண்டே இருக்கும். அவற்றை மேம்படுத்த வேண்டும்.
அதனை விட மக்களின் பிரச்சனைகள் ஏராளமாக இருக்கிறது. தேவைகள் இருக்கிறது. நாங்கள் ஆட்சியமைத்தால் இந்த விடயங்களை மேலும் வலுப்படுத்துவதுடன், மக்களின் தீர்க்க முடியாத பிரச்சனைகளை அடையாளம் கண்டு இலகுவாக்கி தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.
அத்துடன், வவுனியா நகரப்பகுதி இன்று முக்கிய வியாபார மையமாக மாறிக்கொண்டு வருகின்றது. அதனால் நகரில் ஒரு நெருக்கடி நிலையும் ஏற்படுகின்றது. ஆனால் நகரசபைக்குட்பட்ட காணியில் வவுனியா தலைமை பொலிஸ் நிலையம் அமைந்துள்ளது.
நாங்கள் ஆட்சியமைத்தால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ் தலைமையகத்துடன் கலந்துரையாடி பொலிஸ் நிலையத்தை அந்த இடத்தில் இருந்து மாற்ற நடவடிக்கை எடுப்போம். அங்கு நவீன வியாபாரத் தொகுதி ஒன்றை அமைத்து ஒரு வாகனத் தரிப்பிடத்தையும் அமைப்பதற்கான முயற்சிகளை எடுப்போம். எனவே ஆட்சி அதிகாரம் எமக்கு கிடைத்தால் இந்த திட்டங்களை செயற்படுத்துவோம்” என்றார்.