“நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அதிகளவான உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகளை நாங்கள் கைப்பற்றுவோம்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேன அந்தக் காலப்பகுதிகளில் இடம்பெற்ற தேர்தல்களில் மேடை ஏறி தனது கட்சியைப் பிரபல்யப்படுத்தவில்லை. பதவிக்கான கௌரவத்துடன் செயற்பட்டார். அதேபோல் 2020 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ஷ அதே ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தல் பிரச்சார மேடைகளில் ஏறவில்லை.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரச்சார மேடைகளில் ஏறி தொடர்ந்து பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார். கட்சிக்காகப் பிரச்சாரம் செய்வதை முன்னிலைப்படுத்திக் கொண்டு அவர் செயற்படுகின்றார். அரச தலைவருக்கான பொறுப்புக்களை மறந்து விட்டு அவர் செயற்படுகின்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைக் காட்டிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அதிகளவான உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகளை நாங்கள் கைப்பற்றுவோம்.
தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் பொய் என்பதை மக்கள் நன்கு விளங்கிக்கொண்டுள்ளார்கள். ஆகவே, போலியான வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டமைக்கு மக்கள் இந்த அரசுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்”என்று தெரிவித்துள்ளார்.