கந்தப்பளை புதிய வீதி பகுதியில் மரக்கறி தோட்டத்தை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக, பாதுகாப்பு வேலியில் இணைக்கப்பட்ட மின்சார இணைப்பில் சிக்கி இன்று (26) காலை சனிக்கிழமை முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் கந்தபளை புதிய வீதி பகுதியைச் சேர்ந்த செல்லப்பெருமாள் (வயது 74) என்ற முதியவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த முதியவர் நீண்ட காலமாக குறித்த விவசாயத் தோட்டத்தில் தற்காலிக குடிசை ஒன்றினை அமைத்து தங்கியிருந்து தினமும் தொழில் புரிந்து வந்தவர் எனவும் வழக்கம் போல் இன்று தொழில் செய்வதற்கு காலை விவசாய தோட்டத்திற்கு சென்றதாகவும் அருகில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.
எனினும் குறித்த முதியவருடன் இணைந்து தொழில் புரியும் ஏனைய தொழிலாளர்கள் நீண்ட நேரமாகியும் குறித்த முதியவர் தொழில் புரிவதை காணாது அவர் தங்கியிருந்த குடிசையில் தேடியும் அவர் இல்லாததால் விவசாயத் தோட்டத்திற்கு சென்று தேடிய போது அவர் சடலமாகக் காணப்பட்டமையை அவதானித்துள்ளனர்.
இதன் பின்னர் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டு ஆரம்ப விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி சடலத்தை பார்வையிட்டதன் பின்னர் சடலமானது நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தபளை பொலிஸாருடன் நுவரெலியா தடயவியல் பொலிஸார் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.