அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் சீன பொருட்களுக்கு 145% வரியும், சீனாவில் விற்பனை செய்யப்படும் அமெரிக்க பொருட்களுக்கு 125% வரியும் விதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் இரு நாடுகளும் தங்கள் பொருட்களை எதிரெதிர் நாடுகளில் விற்பனை செய்ய முடியாத சூழல் உருவாகியிருக்கிறது.
இந்நிலையில், சீனா மீது விதிக்கப்பட்ட வரி குறைக்கப்படும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். இதனால் விரைவில் அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று (22) வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப்,
“145% வரி அதிகம்தான். ஆனால் இந்த அளவுக்கு வரி நீடிக்காது. நிச்சயம் குறைக்கப்படும். ஆனால் அது பூஜ்ஜியமாக மட்டும் இருக்காது. ஒரு காலத்தில் சீனாவுக்கு எந்த வரியும் இல்லாமல் இருந்தது. இதனால் நாம்தான் அதிகமாக பாதிக்கப்பட்டோம். இனி இதுபோன்ற நிலை இருக்காது.
அதேபோல முதலீட்டாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய அமெரிக்க நிதிச் செயலாளர் ஸ்காட் பெசென்ட், “இந்த அளவுக்கான வரி தொடர்வது சாத்தியமில்லை. தற்போது இருக்கும் வர்த்தக அமைப்பு நீடிக்காது” என்று கூறியுள்ளார்.
இப்போது வரி பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக ட்ரம்ப் பேசியிருப்பது ஒட்டுமொத்த வர்த்தக போரையும் முடித்து வைக்கும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.