மட்டக்களப்பு – ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலர்சேனை பகுதியிலுள்ள சங்குல குளம் ஒரு சில தனி நபர்களினால் உடைக்கப்படுவதால் குளத்திலுள்ள நீர் தொடர்ச்சியாக வெளியேறுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப் பகுதி மக்கள் இன்று செங்கலடி பிரதேச செயலகம் முன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை சுமார் 10.30 மணியளவில் செங்கலடி சந்தி பிரதான வீதி – சந்தியில் ஒன்றினைந்த இலுப்படிச்சேனை கிராம மக்கள் பேரணியாக செங்கலடி பிரதேச செயலகம் வரை சென்று செங்கலடி பிரதேச செயலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், செயலக வளாகத்துள்ளும் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குளத்தை உடைப்பதை நிறுத்து, அரச அதிகாரிகளே எமது பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள், அரசே எமக்கு உதவு – போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடும் வெயிலுக்கும் மத்தியிலும் தமது வாழ்வாதாரம் அழிக்கப்படுவதாக தெரிவித்து தமது கைக்குழந்தைகளுடனும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே வேளை ஆர்ப்பாட்ட இடத்திற்கு இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன் , இ.ஸ்ரீநாத் ஆகியோர் வருகை தந்திருந்ததுடன் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு அமைப்பாளர் என்.திலகநாதன் உள்ளிட்டோர், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டனர். இதனையடுத்து குறித்த மக்களின் பிரச்சினை தொடர்பாக பிரதேச செயலாளருடனும் மக்கள் பிரதிநிதிகள் கலந்துரையாடினர்.
பிரதேச செயலாளர் தமக்கு நேரடியாக இதற்கான பதில் தர வேண்டும் என்ற கோரிக்கைகமைய செங்கலடி பிரதேச செயலாளரர் கே. தனபாலசுந்தரம் அவர்கள் ஆர்ப்பாட்டக்கார்களிடம் கலந்துரையாடி சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி இதற்கான தீர்வைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்ததையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதேச செயலாளரிடம் தமது மகஜரையும் கையளி;;த்து கலைந்து சென்றனர்.





