“வடக்கு தமிழ்க் கட்சியினர் எம்மை விமர்சிப்பதால் அவர்கள் எதனையும் சாதிக்க முடியாது. இந்த விமர்சனங்களால் எமது பக்கம் வந்துள்ள தமிழ் மக்களைத் தமது பக்கம் மீண்டும் இழுக்க அவர்களால் முடியாது.”
- இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“வடக்கு தமிழ் மக்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு அமோக ஆதரவை வழங்கியுள்ளார்கள். இந்நிலையில் அந்த மக்கள், நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் எமது கட்சிக்கு ஆதரவு வழங்குவதைத் தடுக்கும் வகையில் வடக்கு தமிழ்க் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் என்று சொல்லப்படுபவர்கள், நான் உள்ளிட்ட எமது கட்சியின் உறுப்பினர்களைத் தற்போது விமர்சித்து வருகின்றார்கள்.
இந்த விமர்சனங்களால் அவர்கள் எதனையும் சாதிக்க முடியாது. எமது பக்கம் வந்துள்ள தமிழ் மக்களை தமது பக்கம் மீண்டும் இழுக்க அவர்களால் முடியாது. ஏனெனில் வடக்கு தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்கின்றார்கள்.
இந்த மக்களின் அரசியல், பொருளாதார ரீதியிலான கோரிக்கைகளை நாம் நிறைவேற்றுவோம். எம்மை நம்பி வரும் மக்கள் எவரையும் நாம் கைவிட மாட்டோம்.” – என்றார்.