மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக உஷ்ணமான காலநிலை காணப்படுவதனால் சிறுவர்களுக்கு இதய நோய்கள் மயக்கம் உயிரிழப்புக்கள் கூட ஏற்பட வாய்ப்பு உண்டு பொதுமக்கள், சிறுவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள அதிக அக்கறையுடன் செயல்பட வேண்டும் என மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் இரா முரளீஸ்வரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது அதிக வெப்பமான காலநிலை காணப்படுவதனால் பொதுமக்கள் மேலதிகமான உடற்பயிற்சிகள், விளையாட்டு நிகழ்வுகள், உரியமுறையில் ஒழுங்குபடுத்தப்படாத களியாட்ட நிகழ்வுகள் என்பவற்றை தவிர்த்துக் கொள்வதோடு போதுமான அளவு குடிநீர் அருந்த வேண்டும்.
இந்த அதிக வெப்பத் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுப்பதோடு தேவையற்ற விதத்தில் நண்பகல் வேளைகளில் நடமாடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
இதன் மூலம் ஏற்படுகின்ற உயிரிழப்புக்கள் இதன் பாதிப்புக்களில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் கூடுதலாக சிறுவர்கள் அதிக அக்கறையுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறான காலகட்டங்களில் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுவதை தவிர்க்க வேண்டும்.
அத்துடன் வயதானவர்கள் தேவையற்ற உடலை வருத்துகின்ற செயற்பாடுகளை தவிர்க்க வேண்டும். என மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் இரா. முரளீஸ்வரன் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.