இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று (05) சந்திப்பொன்று நடைபெற்றது.
இதன்போது எதிர்க்கட்சித் தலைவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு புகைப்படமொன்றை வழங்கியுள்ளார்.
குறித்த புகைப்படத்தில் மறைந்திருக்கும் கதை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“வில்பத்து தேசிய பூங்காவிலிருந்து, eye-one என அழைக்கப்படும் இலங்கை சிறுத்தையின் சிறப்புப் புகைப்படத்தை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கியதில் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு கண்ணில் பார்வை இழந்த போதிலும் காட்டில் வெற்றிகரமாக உயிர்வாழும் இந்த தனித்துவமான விலங்கு, இலங்கையின் இயற்கை பாரம்பரியம் மற்றும் அழகின் உண்மையான அடையாளமாகும்.
அதனுடைய நீல நிறக் கண்கள் சவால்களை எதிர்கொண்டு உயிர்வாழ்ந்ததைப் பற்றிய ஒரு நீண்ட கதையைச் சொல்கின்றன. இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக, இந்த உயிரினம் கடந்த சில ஆண்டுகளாகக் காணப்படவில்லை, மேலும் அது இன்னும் உயிருடன் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.” என பதிவிட்டுள்ளார்.
