இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி ஸ்ரீநாத் அவர்களின் பங்கேற்போடு வேட்பாளர்கள் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு ஏறாவூர் பற்றுப் செங்கலடி பிரதேச சபைக்குரிய 11ம் வட்டாரம் வந்தாறுமூலை வட்டாரத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் இன்று தங்களது ஆரம்ப பிரச்சாரப் பணிகளில் ஈடுபடும் முகமாக கிராமத்தில் உள்ள அனைத்து ஆலயங்களுக்கும் சென்று இறை ஆசியினை வேண்டி வழிபாடுகளை மேற்கொண்டிருந்ததோடு தங்களது பிரச்சாரப் பணியினை இன்றிலிருந்து ஆரம்பிக்க இருப்பதாகவும் வேட்பாளர்கள் தெரிவித்தனர்.
வேட்பாளரான தர்மலிங்கம் பிரபாகரன் அவர்களோடு பட்டியல் வேட்பாளர்களான நல்லையா சிவசக்தி, கிருஷ்ணப்பிள்ளை மதுமதி அவர்களும் இன்று முதல் கட்ட பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டனர்.
அத்தோடு இன்றைய இந்த நிகழ்வில் கட்சி ஆதரவாளர்களும், ஏனைய பொதுமக்கள், நலன்விரும்பிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நாகர்காலத்தில் உருவாக்கப்பட்ட வந்தாறுமூலை அம்பலத்தடி ஸ்ரீ நீர்முக பிள்ளையாரை வணங்கி பின் ஸ்ரீ கண்ணகி அம்மனையும் வணங்கி அதனைத் தொடர்ந்து மருங்கையடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், கிழக்கின் திருப்பதியாக திகழும் வந்தாறுமூலை ஸ்ரீ மகாவிஷ்ணு பெருமனை வணங்கி அதனை தொடர்ந்து பெரிய தம்பிரான் ஆலயம் மற்றும் ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலயம் என கிராமத்தில் உள்ள ஆலயங்களுக்கு சென்று தங்களது வணக்கத்தினை மேற்கொண்டு இன்றைய பிரச்சாரப் பணியினை நிறைவு செய்து கொண்டதோடு அடுத்தகட்டப் பிரச்சார பணிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவித்தனர்.





