கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (04.04.2025) பி. ப 02.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன் போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட கிராமிய வீதி அபிவிருத்திக்கு 1000.00 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், 2025.03.25 ஆம் திகதி இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் வீதிகள் தொடர்பான உப குழுக் கூட்டத்தினை ஒழுங்குபடுத்துமாறு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, வீதி அபிவிருத்தியுடன் தொடர்புடைய திணைக்களங்களையும் உள்ளடக்கிய இவ் உப குழுவில் பிரதேச செயலக ரீதியாக முன்னுரிமை அடிப்படையில் வீதிகளை தெரிவு செய்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு சமர்ப்பிப்பதே இக் கூட்டத்தின் நோக்கம் எனவும் தெரிவித்தார்.
மேலும், யாழ்ப்பாண மாவட்ட சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கு 09 செயற்றிட்டங்களுக்கு 131.02 மில்லியன் ரூபா ஒதுக்கிடப்பட்டுள்ளது எனவும் இதனை நீடித்து நிலைக்கும் வகையில் தொடர்புடைய பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள் மற்றும் ஏனைய பங்குதார்களுடன் இணைந்து மிகவும் சரியான முறையில் நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.
மேலும், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு 56.00 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதில் அனுமதிக்கப்பட்ட திட்டங்களை சென்ற ஆண்டு போல் குறிப்பிடப்பட்ட காலத்தில் நிறைவேற்றி முடிக்க அனைவரின் ஒத்துழைப்பினையும் நல்குமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
மேலும், இன்றைய கூட்டத்தில் கிராமிய அபிவிருத்தித் திட்டம், வீட்டுத் திட்டம், சமுர்த்தி வலுப்படுத்தல் வேலைத் திட்டம், நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீட்டுத்திட்டம் போன்ற திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாகவும் அரசாங்க அதிபர் தலைமையில் ஆராயப்பட்டு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர், மாவட்டச் செயலக பிரதம கணக்காளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக பிரதி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள் மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் துறைசாா் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.




