அரசு நியாயமாக செயற்படுமாக இருந்தால் பட்டலந்த போன்று வெலிக்கடை படுகொலையையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பட்டலந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது இவ்வளவு காலமும் தூசு தட்டாமல் இருந்து ஜே.வி.பி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. உண்மையில் அதனை நாம் வரவேற்கின்றோம். அதேநேரம் 1983 ஆம் கலவரம் ஏற்படுத்தப்பட்டது. வெலிக்கடை சிறைச்சாலையில், அங்கு படு கொலை செய்யப்பட்டதன் பின்னனியில் கலவரம் ஏற்பட்டு இயக்கங்களுக்கு தமிழ் இளைஞர்கள் சாரை சாரையாக சென்றனர்.
ஆகவே, ஒரு கேள்வியை இந்த அரசாங்கத்திடம் கேட்ட விரும்புகின்றேன். இதை நாடாளுன்றத்தில் கொண்டு வந்ததைப் போன்று ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சிக் காலத்தில் வெலிக்கடை சிறையில் காடையர்கள் வெளியில் இருந்து உள்ளே அழைக்கப்பட்டு படு கொலை செய்யப்பட்டார்கள். அவர்களுடைய உடல்கள் எங்கே புதைக்கப்பட்டது என்பது கூட தெரியாமல் இருக்கிறது. ஆகவே இந்த அரசு நியாயமாக செயற்படுமாக இருந்தால் வெலிக்கடை படு கொலையையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பட்டலந்த பிரச்சனை எல்லாவற்றையும் விட 1983 கலவரம் கூடுதலான இழப்புக்களை சந்தித்தது. இது வரலாற்றில் முதன்மையான இடத்தில் உள்ள படு கொலை. இதை அரசாங்கம் விசாரணைக்கு கொண்டு வந்து, அதற்கான நீதி நியாயத்தை வெளிப்படுத்த வேண்டும் என மக்கள் சார்பாகவும், வெலிக்கடையில் படு கொலை செய்யப்பட்ட போராளிகள் சார்பாகவும் கோரிக்கையை முன் வைக்கின்றேன் எனத் தெரிவித்தார்.