உடுவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் பவானந்தராஜா தலைமையில் இடம்பெற்றது.
பிரதேசம் சார்ந்த பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்ட குறித்த கூட்டத்தில் யாழ் கிளிநொச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் பங்கேற்கவில்லை.
வழக்கம் போலவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாண அவைத்தலைவருக்கான ஆசனங்கள் முன் வரிசையில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த போதும், குறித்த யாரும் இக்கூட்டத்தில் பங்கெடுத்திருக்கவில்லை.
இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பவானந்தராஜா, அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் முறையான அழைப்பு விடுக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி, கலந்து கொள்ள முடியாமை தொடர்பாக அறிவித்தலை வழங்கியிருந்தார். ஏனைய எவரும் அறிவித்திருக்கவும் இல்லை கலந்துகொள்ளவும் இல்லை எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் தெரிவித்த அவர், நீண்ட காலத்துக்கு பிறகு நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் என்பதால் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
அவற்றுள் சில விடயங்களுக்கு உடனடியாகத் தீர்வு வழங்கப்பட்டாலும், சிலவற்றிற்கு உரிய சில காலங்கள் தேவைப்படுவதால் அதிகாரிகளின் அறிக்கைகளை எதிர்பீர்த்திருக்கின்றோம். குறித்த அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அவற்றுக்கான தீர்வுகளை வழங்க நடவடிக்கைகள் எடுப்போம் எனத் தெரிவித்தார்.


