கடமையிலிருந்து தப்பிச் சென்ற 679 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 22 ஆம் திகதி முதல் நேற்று (05) வரையான காலப்பகுதியில் முப்படையினர் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 455 பேர் இராணுவத்தினராலும், 80 பேர் காவல்துறையினராலும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், 63 கடற்படை உத்தியோகத்தர்களும் 81 விமானப்படை உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பாதுகாப்புப் படைகளில் இருந்து தப்பியோடிய அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
உத்தியோகபூர்வமற்ற முறையில் இராணுவத்திலிருந்து விலகிய அல்லது பணி இடைநீக்கம் செய்யப்பட்ட இராணுவ வீரர்களே குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.