வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் JCB இயந்திரம் மூலம் இரவோடு இரவாக பெருமளவான காடுகள் அழிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (28) இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அரச நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் குறிப்பிட்ட நிலப்பகுதியை தனிப்பட்ட தேவைகளுக்காக குத்தகை அடிப்படையில் பெற வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் ஊடாக ஆவண செய்துள்ளார்.
ஆவண கடிதத்தை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலரிடம் கையளித்தவுடன் காடுகள் நிறைந்த சம்பந்தப்பட்ட பெருமளவான நிலப்பகுதியை அனுமதியின்றி JCB இயந்திரம் கொண்டு இரவோடு இரவாக முற்றாக அழித்துள்ளார்
சம்பவம் அறிந்து அப்பகுதி மக்கள் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதைடுத்து நிறுத்த முற்பட்ட வேளை குறித்த நபர் தொடர்ந்து அனுமதியின்றி காடுகளை அழித்துள்ளார்.
இது தொடர்பாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி கருத்து தெரிவிக்கையில்,
அரச நிறுவனத்தில் பணியாற்றும் குறித்த நபர் ஆவண கடிதம் தந்துள்ளதாகவும் காடுகளை அழிப்பதற்கு தாம் அனுமதியளிக்கவில்லை என்றும் குறித்த பிரதேசம் வனஜுவராசிகள் திணைக்கள ஆளுகைக்குள் இருப்பதால் தம்மால் அனுமதி கொடுக்க முடியாதென்றும் அவ்வாறு அவர் காடுகளை அழித்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக செம்பியன்பற்று வடக்கு கிராம அலுவலர் காந்தரூபன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
சம்பந்தப்பட்ட நபர் குத்தகை அடிப்படையில் குறித்த இடத்தை கோரியிருந்ததாகவும் தாம் எவ்வகையிலும் அப்பகுதியை சுவீகரிப்பதற்கோ, காடுகளை அழிப்பதற்கோ அனுமதி கொடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலதிக தகவல்களை அப்பகுதியை சேர்ந்த கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் தெரிவித்ததாவது,
குறித்த நபர் தமது கிராம அபிவிருத்திச்சங்க நிர்வாகத்தில் இருக்கின்ற போதும் நிர்வாகத்தின் அனுமதியின்றி, நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தாமல் அனுமதியின்றி JCB இயந்திரத்தை கொண்டு காடுகளை அழித்திருப்பதாக தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளதுடன் பிரதேச செயலாளரால் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.

