யாழ்ப்பாணத்தில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது கனரக வாகனம் மோதியதில் ஆறு பேர் காயமடைந்தனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் பகுதியில் அண்மையில் உயிரிழந்தவரின் இறுதி கிரியைகள் நேற்றைய தினம் (21) நடைபெற்றது. இந்நிலையில் தகன கிரியைக்காக பூதவுடலை கோப்பாய் – கைதடி வீதியில் உள்ள இந்து மயானத்திற்கு எடுத்து சென்றவர்கள் மீது மிக வேகமாக வந்த கனரக வாகனம் ஒன்று மோதித் தள்ளி விட்டு, அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு, யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் இருவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கோப்பாய் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய நால்வரும் விடுதிகளுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் விபத்து சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், தப்பி சென்ற வாகனத்தினை கண்காணிப்பு கமராக்களின் காணொளிகள் அடிப்படையில் தேடி வருகின்றனர்.