யாழ்ப்பாணத்தில் சுகாதாரத்திற்கு கேடான முறையில் கொத்து றொட்டி தயாரித்த உரிமையாளருக்கு 40 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஆனைக்கோட்டை பகுதி பொது சுகாதார பரிசோதகரான ம.ஜெயப்பிரதீப் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, சுகாதாரத்திற்கு கேடான முறையில் கொத்து தயாரித்த உணவக உரிமையாளருக்கும், மற்றுமொரு உணவகத்தில் மலசல கூடத்தினுள் மின் மோட்டாரை இயக்கி, நீர் வழங்கி வந்த நபருக்கும் எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
குறித்த வழக்கு விசாரணைகள் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற போது உரிமையாளர்கள் இருவரும் தம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து, சுகாதாரத்திற்கு கேடான முறையில் கொத்து தயாரித்த உரிமையாளருக்கு 40 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டது, அத்துடன் மலசல கூடத்தினுள் மின் மோட்டாரை இயக்கிய உரிமையாளருக்கு 28 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்ததுடன் கடையினை சீல் வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகருக்கு கட்டளையிட்டது.
நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் குறித்த உணவகம் பொது சுகாதார பரிசோதகரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.