வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளவர்களை இலக்கு வைத்த பெண்ணொருவர் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், அவர் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.
யாழ்ப்பாண நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளான திருநெல்வேலி, கல்வியங்காடு, கோப்பாய், கொக்குவில் ஆகிய பகுதிகளில் அண்மைக்காலத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கும் நபர்களின் வீடுகளை இலக்கு வைத்து செல்லும் பெண்ணொருவர், தான் கிளிநொச்சியை சேர்ந்தவர் எனவும், தனக்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது என போலியான மருத்துவ அறிக்கைகளை காண்பித்து பணம் பெற்று மோசடியில் ஈடுபடுகின்றார்.
கடந்த செவ்வாய்க்கிழமை வீடொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற பெண், தனக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ள பண உதவி தேவை என கூறி 50 ஆயிரம் ரூபாய் பணத்தினை மோசடியாக பெற்று சென்றுள்ளார்.
பணத்தினை கொடுத்த வெளிநாட்டவர், அது தொடர்பில் தனது உறவினர்களுக்கு தெரிவித்த போதே, குறித்த பெண் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த வேறு நபர்களிடமும் பணத்தினை வாங்கியுள்ளமையை உறவினர்கள் கூறியுள்ளனர்.
அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்ட விடயம் வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தால், விசாரணை நடவடிக்கைகளால் தான் நாட்டுக்கு திரும்ப முடியாது கால தாமதம் ஏற்படும் என கருதி முறைப்பாடு செய்யவில்லை எனவும் பொலிஸ் நிலையத்தில் மோசடி பெண் குறித்து தகவல்களை தெரிவித்துள்ளார்.
பெண்ணின் மோட்டார் சைக்கிள் இலக்கம், பெண் தொடர்பான அடையாளங்களை பொலிஸாருக்கு தெரிவித்தமையின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
அதேவேளை, வெளிநாடுகளில் இருந்து வருவோரை இலக்கு வைத்து நன்கொடைகள், மருத்துவ உதவிகள் என கோரி வருவோர் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுத்தியுள்ளனர்.