வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் போதை ஆசாமிகள் உயர்தர வகுப்பு மாணவன் மீது கண்ணாடித் துண்டுகளால் வெட்டியதில் மாணவன் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடுள்ளார்.
நேற்று (10.02) மாலை வைரவபுளியங்குளத்தில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் கற்றல் செயற்பாட்டை முடித்து வீதியால் சென்று கொண்டிருந்த உயர்தர வகுப்பு மாணவன் மீது வைரவபுளியங்குளத்தில் வழமையாக கூடி நிற்கும் போதைக்கு அடிமையான இளைஞர்கள் குழு கண்ணாடி துண்டுகளால் வெட்டியுள்ளனர்.
இதன் காரணமாக காயம் அடைந்த நிலையில் அங்கு நின்றவர்கள் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை அளிப்பதற்காக அம் மாணவனை பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் குறித்த போதை ஆசாமிகள் தாக்குதலை நடத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
தொடர்ச்சியாக இந்த போதைக்கு அடிமையான இளைஞர்கள் குழு அப்பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையங்களில் கற்றல் செயற்பாட்டை முடித்து வரும் மாணவர்கள் மீது தாக்குதலை நடத்துவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.
இது தொடர்பில் வவுனியா பொலிஸாரும், தற்போதைய மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும் அசமந்தமாக இருப்பதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.