இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியாசாலையின் பொறியியல் பகுதியினரால் முன்னெடுக்கப்பட்ட பணிபகிஸ்கரிப்பு போராட்டம் பேச்சுவார்த்தையினை அடுத்து கைவிடப்பட்டது.
குறித்த சாலையின் பொறியியல் பிரிவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இரண்டு மாதங்களாக மேலதிக நேரக்கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதனை அடுத்து இன்று (09.02) காலை முதல் அவர்களால் பணிபுறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் வவுனியா சாலையின் பேருந்துகள் காலை முதல் சேவைகளை முன்னெடுக்கவில்லை.
இந்நிலையில் சாலைக்கு சென்ற தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது அவர்களுக்கான மேலதிக நேரக்கொடுப்பனவை விரைவாக வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
இதேவேளை குறித்த விடயம் தொடர்பாக எதிர்வரும் வாரம் போக்குவரத்து சபையின் உயர் அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை ஒன்று முன்னெடுக்கபட உள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.