‘சண்டே லீடர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படு கொ லைச் சம்பவத்தின் சந்தேக நபர்களை விடுதலை செய்யலாம் என சட்டமா அதிபர் பரிந்துரை செய்துள்ளமை குறித்து அரசு ஆராயும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இந்த விவகாரத்தை மூடிமறைக்கும் நோக்கம் எதுவும் அரசுக்கு இல்லை. குற்றவாளிகளை விடுதலை செய்யும் நோக்கமும் இல்லை.
இந்த விவகாரத்தை முழுமையாக ஆராய்ந்து இந்த நாட்டு மக்களுக்கு நீதி வழங்குவோம். மக்கள் வழங்கிய ஆணையை அவமதிக்கமாட்டோம்.
சில யதார்த்தபூர்வமான நெருக்கடிகள் காரணமாகவே சில விசாரணைகள் தாமதமாகின்றன. அரசின் தலையீடுகளால் தாமதமாகவில்லை.” – என்றார்.
இதேவேளை, ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான ஏனைய குற்றச் செயல்களுக்கு நீதி கோரி சுதந்திர ஊடக இயக்கமும் ஏனைய ஊடக நிறுவனங்களும் கறுப்பு ஜனவரியை அனுஷ்டிக்கும் தருணத்தில், லசந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் மூவர் விடுதலை செய்யப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டு சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க கையொப்பமிட்ட கடிதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.