இலங்கையில் அனுமதி இன்றி சட்ட விரோதமாக கட்டப்பட்டதாக கூறி இஸ்லாமிய பள்ளிகளை இடிக்கலாம் என்றால் தையிட்டியில் கட்டப்பட்ட சட்டவிரோத விகாரைக்கு மாற்றுக் காணி வழங்க வேண்டும் எனக் கூறுபவர்கள் அரசின் அடிவருடிகள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கயேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சித் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் சட்டவிரோதமாக அனுமதி இன்றி கட்டப்பட்ட மத வழிபாட்டிடங்கள் இடிக்கப்பட்டிருக்கின்றது.
கொழும்பில் அனுமதியின்றி கட்டப்பட்ட இஸ்லாமிய பள்ளி இடிக்கப்பட்ட நிலையில் அரசின் அடிவரடிகளாக செயல்படுவோர் தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட விகாரையால் காணியை இழந்த மக்களுக்கு மாற்றுக் காணி வழங்கலாம் என்கின்றனர்.
தையிட்டி சட்டவிரோத விகாரை அடிக்கல் நாட்டப்பட்டு சில நாட்களுகளில் அது தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தினோம்.
மக்களின் தனியார் காணிகளை அடாத்தாக பிடித்து விகாரை அமைக்கப்பட்டு வருகிறது. அதை தடுத்து நிறுத்துமாறு கோரினோம் ஆனால் அது இடம்பெறவில்லை விகாரை கட்டி முடிக்கப்பட்டது.
இறுதியாக ஜனாதிபதி தலைமையில் இடம் பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் வடமாகண ஆளுநர் தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளுக்கு பதிலாக மாற்றுக்கான மக்கள் கேட்கிறார்கள் என தெரிவித்தார்.
அவரது கருத்தை நான் அன்றே மறுத்திருந்தேன் ஒரு சட்ட விரோதமான செயற்பாட்டை நியாயப்படுத்தும் நோக்கில் தமிழ் ஆளுநர் ஒருவர் செயற்படக் கடாது.
வட மாகாண ஆளுநர் தையிட்டி சட்ட விரோத விகாரையால் காணிகளை இழந்த மக்கள் சிலரை அழைத்து கலந்துரையாடல் நடாத்தியதாக அறிந்தோம்.
குறித்த கலந்துரையாடல் வெளிப்படைத் தன்மையான கலந்துரையாடலாக அமையவில்லை ஏனெனில் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்ளாமல் ஆளுநர் தனியாக கலந்துரையாடலை மேற்கொண்டிருக்கிறார்.
காணிகளை இழந்த மக்களை நாங்கள் சந்தித்திருக்கிறோம் அவர்கள் தெளிவாக கூறியிருந்தார்கள் கடந்த வருட இறுதியில் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் தொடர்பில் ஆளுநருக்கு கூறி இருந்தோம். .
மக்களின் பிரதிபலிப்பு தொடர்பில் சில நாட்களுக்குள் நாங்கள் வெளிப்படையாக அறிந்து அது தொடர்பில் இனிவரும் காலங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வோம் என்றார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வாரம் ஜனாதிபதி தலைமையில் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடல் என்னை பொறுத்தவரையில் பிரயோசனமற்ற ஒரு கலந்துரையாடல் என்றே கூறுவேன். ஏனெனில் ஒரு நாட்டின் ஜனாதிபதி ஒரு மாவட்டத்தினுடைய அபிவிருத்தி கலந்துரையாடலுக்கு வருகை தரும்போது அவர் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வை முன் வைத்திருக்க வேண்டும்.
குறித்த கலந்துரையாடலில் மக்கள் எதிர் நோக்குகின்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்காத ஒரு கலந்துரையாடலாக அமைந்தது.
ஆகவே தையிட்டி விகாரை தொடர்பில் மக்கள் பக்கமே நாங்கள் நிற்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.