பாணந்துறை, பின்வத்தை பிரதேசத்தில் நடைபெற்ற களியாட்ட நிகழ்வொன்றின் போது இரு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் மன்னா கத்தியால் தாக்கப்பட்டு நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஒருவர் காயமடைந்துள்ளதாக பின்வத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பாணந்துறை, பின்வத்தை பிரதேசத்தில் நடைபெற்ற களியாட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்ட இரு நண்பர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறின் போது, சந்தேக நபர் மன்னா கத்தியால் தனது நண்பனின் காலை இரண்டாக வெட்டி எடுத்துள்ளார்.
காயமடைந்த நண்பன் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபரான பாணந்துறை – பின்வத்தை பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடையவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் மன்னா கத்தி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பின்வத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.