ஈரான், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் மீறியதாகக் குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க ஜனாதிபதி, ஈரான் மீது தாக்குதல்களைத் தொடரப் போவதாகக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், “அமெரிக்காவின் போர் வானூர்திகள் ஈரானின் ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி சேமிப்பு நிலையங்கள், மற்றும் கடற்கரை ரேடார் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளன.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒருபோதும் திருந்த மாட்டார்கள் என்பது தெளிவாகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஈரான் மீதான தனது கடும் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ள அவர், “நாங்கள் நியாயமாகச் செயல்பட முடியாத ஒரு கட்டம் வரலாம்.
அப்போது, நாங்கள் வெற்றிகரமாகத் தொடங்கிய வேலையை இராணுவ ரீதியாக முழுமையாக முடிக்க நேரிடும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், ஈரானிய இஸ்லாமியக் குடியரசு என்பதே இல்லாமல் போய்விடும்” என்று மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கடந்த காலங்களில் நிலவி வந்த பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அதிரடி அறிக்கை சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.










