ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு உத்தரவிடும் சட்டமூலத்தை அமெரிக்க செனட் சபை செவ்வாயன்று (23) ஆதரித்தது.
இது, பெருகிவரும் அமைதியின்மையுடன் காணப்படும் காங்கிரஸிடமிருந்து குடியரசுக் கட்சி ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்ட அண்மைய கண்டனமாகும்.
பெப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து தொடங்கிய, மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறாத அந்த மோதல் குறித்து ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சியினரில் சிலரிடையே கூட அதிகரித்து வரும் கவலையை வெளிப்படுத்தும் விதமாக, இந்த மாதத் தொடக்கத்தில் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட ‘போர் அதிகாரத் தீர்மானத்திற்கு’ (war powers resolution) ஆதரவாக செனட் சபை 50-க்கு 48 என்ற வாக்கு வித்தியாசத்தில் வாக்களித்தது.
1973-இல் ‘போர் அதிகாரச் சட்டம்’ (War Powers Act) என்று பரவலாக அறியப்படும் ‘போர் அதிகாரத் தீர்மானம்’ (War Powers Resolution) இயற்றப்பட்டதிலிருந்து, அமெரிக்க ஆயுதப் படைகளை மோதல் நடவடிக்கைகளிலிருந்து விலக்கிக்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு உத்தரவிடும் தீர்மானம் ஒன்றை காங்கிரஸின் இரு அவைகளும் நிறைவேற்றியது இதுவே முதல் முறையாகும்.
அண்மைய காலம் வரை காங்கிரஸின் குடியரசுக் கட்சி உறுப்பினர்களிடமிருந்து ஏறக்குறைய ஒருமித்த ஆதரவைப் பெற்றிருந்த ட்ரம்பிற்கு இந்த வாக்கெடுப்பு ஒரு பின்னடைவாக அமைந்தது.
மேலும், போருக்காகப் பல்லாயிரக்கணக்கான கோடி டாலர்களை அங்கீகரிக்குமாறு நிர்வாகம் காங்கிரஸைக் கேட்கும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் இது நிகழ்ந்துள்ளது.
ட்ரம்பின் குடியரசுக் கட்சியினர் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டிலும் சிறிய பெரும்பான்மையைக் கொண்டுள்ளனர், ஆனால் எதிர்வரும் நவம்பரில் நடைபெறவிருக்கும் இடைக்காலத் தேர்தல்களுக்கு முன்னதாக, ஒரு சில உறுப்பினர்கள் சில பிரச்சினைகளில் ஜனாதிபதியுடன் முரண்பட்டுள்ளனர்.
இந்தத் தேர்தல்கள், கட்சி காங்கிரஸின் கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்ளுமா என்பதைத் தீர்மானிக்கும்.
கூட்டாட்சி அதிகாரிகளால் குறிவைக்கப்பட்டதாகத் தனது அரசியல் கூட்டாளிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக ட்ரம்ப் கொண்டுவந்த 1.8 பில்லியன் டொலர்”ஆயுதமயமாக்கல் எதிர்ப்பு” நிதிக்கு சில குடியரசுக் கட்சியினர் அண்மையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், தனது குடியேற்ற ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதற்கான 70 பில்லியன் டொலர் சட்டமூலத்தையும் அவர்கள் முடக்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.










