இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நடவடிக்கைகளால் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தைகள், பாதிக்கக்கூடும் என அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் எச்சரித்துள்ளது.
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது.
இது அமெரிக்கா – ஈரான் இடையிலான அமைதி உடன்படிக்கையின் முக்கிய அம்சங்களை மீறும் வகையில் உள்ளதாக உளவுத்துறை அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
அண்மையில் ஹிஸ்புல்லா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 4 இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இந்த பதற்றமான சூழலால், சுவிட்சர்லாந்தில் திட்டமிடப்பட்டிருந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.
இஸ்ரேலில் பொதுத்தேர்தல் வரவிருப்பதால், லெபனானில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவோ அல்லது பின்வாங்கவோ நெதன்யாகுவிற்கு உள்நாட்டு அரசியல் ரீதியாக கடும் அழுத்தம் உள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல்களின் தீவிரம் குறித்து ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் இஸ்ரேல் அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளன.
பிரான்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜனாதிபதி ட்ரம்ப், லெபனான் விவகாரத்தில் தங்களுக்குள் “சிறிய சர்ச்சை” இருப்பதை ஒப்புக்கொண்டதோடு, இஸ்ரேலை நிதானம் காக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது தெற்கு லெபனானில் 200 சதுர மைல்க்கும் அதிகமான பகுதியை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
இஸ்ரேலியப் படைகள் அங்கிருந்து வெளியேறாத வரை, நிரந்தரப் போர்நிறுத்தம் சாத்தியமில்லை என்றும், மீண்டும் பதற்றம் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர்.










