ஈரானிய உயர்மட்டத் தலைமைகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, அந்த நாட்டின் மீது திட்டமிடப்பட்டிருந்த வான்வழித் தாக்குதல்கள் மற்றும் குண்டுவீச்சுகளைத் தான் ரத்து செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இன்று இரவு ஈரான் மீது அமெரிக்கா மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்தும் என்றும், ஈரானின் கார்க் தீவு உள்ளிட்ட முக்கிய எண்ணெய் உள்கட்டமைப்பு மையங்களை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
இது குறித்து அவர் வெளியிட்திருந்த அறிவிப்பில்,
“அமெரிக்கா இன்று இரவு ஈரான் மீது மிகக் கடுமையாகத் தாக்கப் போகிறது.
வெகு தொலைவில் இல்லாத எதிர்காலத்தில், நாம் கார்க் தீவு (Kharg Island) மற்றும் பிற எண்ணெய் உள்கட்டமைப்புப் பகுதிகளைக் கைப்பற்றுவோம்” என்று குறிப்பிட்டுந்தார்.
மேலும், வெனிசுவேலாவுடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையைப் போலவே, ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைகளின் முழுமையான கட்டுப்பாட்டையும் அமெரிக்கா ஏற்கும் என்றும்,
இந்த நடவடிக்கை வெனிசுவேலா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் மிகச் சிறந்த முறையில் பலனளித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே தற்போது தாக்குதல்களை கைவிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு ஈரான் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையானது இரு நாடுகளுக்கும் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தை “முற்றிலும் அர்த்தமற்றதாக” மாற்றிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் படைகளைக் குறிவைத்து குவைத், பஹ்ரைன் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை பதிலடித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.










