கம்பளை பகுதியில் வீட்டின் பரணிலிருந்து நிலைதடுமாறி விழுந்த தந்தையின் உடலின் கீழ் நசுங்கிய 3 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் கம்பளை, நாரன்விட்ட – ஆடியா கடவத, பிஹில்லதெனிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வீட்டினுள் பொருட்களை வைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த பரணில் மோட்டார் சைக்கிளை கழுவுவதற்கான தண்ணீர்க் குழாயை எடுப்பதற்காக தந்தை மேலே ஏறியுள்ளார்.
அந்த நேரத்தில், தந்தைக்குப் பின்னால் சென்ற 3 வயது சிறுவன் பரணின் கீழ் நின்றபடி அவரைப் பார்த்துக்கொண்டிருந்த போது, பரணிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த தந்தை, நேரடியாக தனது மகன் மீது விழுந்துள்ளார்.
இதன்போது, தந்தையும் குழந்தையும் படுகாயமடைந்தனர்.
இருவரும் உடனடியாக கம்பளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த தந்தை கம்பளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










