இன்று நான்கு சட்டமூலங்களின் ஒழுங்குவிதிகள் திருத்தப்பட்டு சபையின் அனுமதிக்காவும் அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கான அனுமதியையும் சபையிடம் கோரியுள்ளீர்கள். நாங்கள் அவசரகாலச் சட்ட நீடிப்பை எதிர்க்கிறோம். கடந்தகாலத்தில் அவசரகால சட்டத்தையும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தையும் மோசமாக பயன்படுத்தியவர்கள் இன்று அவசரகால சட்டம் தொடர்பாக பேசுவது வேடிக்கையானது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
நுழைவிசைவு கொள்கைகள் மற்றும் நுழைவு நடைமுறைகளைப் புதுப்பிக்கும் நோக்கில், குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டம் ( திருத்தம்) இன்று நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த ஒழுங்குமுறைகள் ஏற்கனவே உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு சட்ட ஒழுங்கு முறைகளைப் பின்பற்றி, பயண அங்கீகாரங்களுக்கான மேம்படுத்தப்பட்ட எண்மிய நடைமுறைகளையும், நுழைவிசைவு வழங்குவதற்கான குறிப்பிட்ட விதிமுறைகளையும் அறிமுகப்படுத்துகின்றது.
2006 ஆம் ஆண்டின் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்ட (திருத்த) சட்டம் எண் 31-க்கு இணங்க, வதிவிட, வருகை மற்றும் இடைத்தங்கல் நுழைவிசைவு வழங்குவதை நிர்வகிக்கின்றன.
மேலும், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்போது தற்காலிக இடைக்கால விசாக்களை வழங்க தலைமை கட்டுப்பாட்டாளருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
மின்னணு பயண அனுமதி (ETA): அமைச்சரின் ஆணை மூலம், குறுகிய கால தங்குதல்களின் வகைகள் மற்றும் செல்லுபடியாகும் காலத்தைப் மாற்றும் வகையில், மின்னணு பயண அனுமதி அமைப்பைத் திருத்தலாம்.
இணக்கம் மற்றும் தண்டனைகள்:
இந்தச் சட்டம், நுழைவு ஒப்புதல்களுக்கான கடுமையான தேவைகள், சட்டவிரோத நுழைவுக்கான தண்டனைகள் மற்றும் நாடு கடத்துவதற்கான விதிகளை உள்ளடக்கியுள்ளதுடன், சட்டத்தின் கீழ் செய்யப்படும் குற்றங்களுக்கான பிணை நடைமுறைகளில் கவனம் செலுத்தும் புதிய திருத்தங்களையும் கொண்டுள்ளது.
இந்த ஒழுங்குமுறை மாற்றங்கள், குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையால் நிர்வகிக்கப்படும் சட்டப்பூர்வமான, ஒழுங்கமைக்கப்பட்ட பயணம் மற்றும் வசிப்பிடத்தை எளிதாக்குவதோடு, தேசியப் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த சட்ட திருத்தம் செய்யப்பட்டாலும் வேறுபல காரணிகளும் தேசிய பாதுகாப்பில் தாக்கம் செலுத்துகின்றன.
குறிப்பாக அரசியல், பொருளாதார உறுதிப்பாடு ஆகியன முதன்மையானவை ஆகும்.
இந்த நாட்டின் அரசியல் உறுதிப்பாட்டை நிலைநாட்ட பல தசாப்தங்களாக தீர்க்கப்படாதுள்ள எண்ணிக்கையில் சிறுபான்மையான மக்களின் அரசியல் வேட்கை நிவர்த்தி செய்யப்படல் வேண்டும். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது இருந்த அந்த நம்பிக்கை இப்போது எம்மத்தியில் குறைந்துகொண்டுபோவதை அவதானிக்கலாம்.
பொருளாதார உறுதிப்பாட்டை பலப்படுத்தும் ஒருசில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் எமது தாயகப் பிரதேசத்தில் அவ்வாறான நடவடிக்கைகளை அறவே காணமுடியாதுள்ளது.
வேலைவாய்ப்பை ஏற்படுத்தக்கூடிய எந்தவிதமான சிறு, இடைத்தர மற்றும் பாரிய முதலீட்டுக்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை.
முதலீட்டாளர்களுக்கான நிர்வாக ரீதியான எந்தவிதமான ஒழுங்குகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. முதலீட்டிற்கான நிலத்தை பெறுவதிலிருந்து ஏனைய அனுமதிகளை பெற முதலீட்டாளர்கள் வருடக்கணக்கில் அலைக்களிக்கப்படுகிறார்கள்.
முதலீட்டாளர்கள் வருவதற்கான முக்கியமான போக்கு – வரவு இணைப்பு மேம்படுத்தப்பட வேண்டும். ஆனால் இந்திய அரசால் கடனற்ற உதவியாக காங்கேசந்துறை துறைமுக அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட 63 – 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை (2200 கோடி இலங்கை ரூபா) பயன்படுத்த தொடக்க வேலைகள் கூட வருடக்கணக்கில் ஆரம்பிக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது.
அதேவேளை பலாலி விமான நிலைய அபிவிருத்தி வேலைகள் நடைபெற்று வந்தாலும் தூரநாடுகளில் இருந்து வரும் பெரிய விமானங்கள் தரையிறங்க ஏதுவான வசதிகள் செய்யப்படல் வேண்டும்.
பொருளார முன்னேற்றத்திற்கு எரிசக்தி அவசியமானது. அது மக்களுக்கு குறைந்த விலையில் தொடரச்சியாக கிடைக்கப்படல் வேண்டும். அதற்காக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருளை சேமிக்கும் வசதியை மேம்படுத்த திருகோணமலையில் உள்ள எரிபொருள் சேமிப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். ஆனால் இந்த தேவைக்காக இலங்கை – இந்திய – ஐக்கிய அரபு இராட்சியம் ஆகிய மூன்று நாடுகள் கைச்சாத்திட்ட கூட்டு உடன்படிக்கை இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே அரசியல் பொருளாதார மேம்பாடு ஏற்படுத்தப்படாவிட்டால் இந்தநாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுமா என்ற கேள்விக்கு அரசாங்கமே பொறுப்புச் சொல்ல வேண்டும்.
1.அரச – தனியார் பேருந்து சேவை ஒருங்கிணைந்த நேர அட்டவணையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும். வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இது நடைமுறையில் உள்ளது. ஒருங்கிணைந்த நேர அட்டவணை இல்லாத காரணத்தால் அவர்களுக்கு இடையே ஏற்படும் போட்டியினால் விபத்துக்கள் ஏற்படுகின்றது. அத்துடன் தனியார், இ.போ.ச ஊழியர்களிடையே வீதியில் கை கலப்பு ஏற்படுவதை பல சந்தர்ப்பங்களில் காணக்கூடியதாக உள்ளது. இதனால் பயணிகள் உயிரை பணயம் வைத்தே பயணம் செய்யவேண்டியுள்ளது.
2.வவுனியா பேருந்து நிலையம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நிர்வாகத்திலிருந்து வடக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபைக்கு மாற்றப்படல் வேண்டும். வடக்கு மாகாணத்தில் வவுனியா தவிர்ந்த ஏனைய பேருந்து நிலையங்கள் வடக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபையினாலேயே நிர்வகிக்கப்படுகின்றது.
3.வவுனியா பேருந்து நிலையம் தவிர்ந்த ஏனைய பேருந்து நிலையங்கள் உள்ளூராட்சி மண்றங்களின் பராமரிப்பில் உள்ளது. வவுனியா பேருந்து நிலையமும் மாநகரசபையின் பராமரிபிற்குள் கொண்டுவரப்படல் வேண்டும். சிற்றுண்டிச்சாலையை கையாள்வது மற்றும் மலசலகூட வசதிகளை பேணுவது போன்ற விடயங்களை உள்ளூராட்சி மன்றங்களின் ஆளுகைக்குள் கொண்டுவருவதனூடாக ஏற்படும் வருமானத்தை மக்கள் சேவைக்கு பயன்படுத்த முடியும்.
4.மாகாணங்களுக்கு இடையான போக்குவரத்து சேவையில் புதிதாக கொண்டுவரப்படும் திருத்தத்தின்படி ஒரு நபர்/நிறுவனம் அந்த வழித்தடத்தில் அனுமதிக்கப்பட்ட மொத்த பேருந்து சேவை எண்ணிக்கையில் 20% மட்டுமே கொண்டிருக்கலாம் என்றுள்ளது. அவ்வாறாயின் ஏற்கனவே 20% க்கு மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ள பேருந்துகளை கொண்டவர்களுக்கு எவ்வாறான நிவாரணம் வழங்கப்படும் என்பதை தெளிவுபடுத்தவேண்டும் என கோருகிறேன் என தெரிவித்தார்.










