போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் மூடப்பட்டதன் விளைவாக எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இதன் காரணமாகப் பல்வேறு நாடுகளின் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சோமாலியாவில் நிலவி வரும் கடும் பஞ்சம் மற்றும் பசிப் பிணி மேலும் மோசமடைந்துள்ளது.
வறட்சி, மோதல்கள் மற்றும் போதிய மனிதாபிமான உதவிகள் கிடைக்காதமை போன்ற காரணங்களால், அண்மைக்கால வரலாற்றில் சோமாலியா மிகவும் சிக்கலான உணவு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக உலக உணவுத் திட்டம் (WFP) எச்சரித்துள்ளது.
கடந்த ஒரே ஆண்டில் மட்டும் சோமாலியாவில் பட்டினியால் வாடுவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்து, தற்போது 6.5 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். இதில் இரண்டு மில்லியன் மக்கள் “அவசரக்கால பசி” (Emergency hunger) எனும் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உலக உணவுத் திட்டத்தின் சோமாலிய நாட்டு பணிப்பாளர் ஹமீத் நூரு, மக்கள் தங்களின் சிறிய சொத்துக்களை விற்பது, உணவைக் குறைப்பது அல்லது முற்றாகத் தவிர்ப்பது போன்ற மிகக் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கவலை வெளியிட்டுள்ளார்.
உதவி தேடித் தங்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேறும் குடும்பங்களுக்கு, தற்போது எவ்வித உதவியும் கிடைக்காத ஒரு இக்கட்டான சூழல் நிலவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.










