ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்கிரம நேர்காணல் செய்த நான்கு பேர் மரணித்ததை அடுத்து அவருக்கு உயிர் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சமுதித்த சமரவிக்ரமவுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களுக்கான பாதுகாப்புப் பிரிவின் நான்கு பொலிஸ் அதிகாரிகள் தனக்கு பாதுகாப்பு வழங்க நியமிக்கப்பட்டுள்ளனர் என்று சமுதித்த சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.
சமுதித்த சமரவிக்கிரமவினால் நேர்காணல் செய்யப்பட்ட நான்கு பேர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில் மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களை அடுத்து சமுதித்த சமரவிக்கிரம தனக்குப் பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
நாடாளுமன்றத்திலும் இந்த விடயத்தை எடுத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நீதிபதிகள் மற்றும் குறிப்பாக ஊடகவியலாளர்களின் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு அதிகாரிகளுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.
கடும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கும் சமுதித்த சமரவிக்கிரம போன்ற ஊடகவியலாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.