மலபே ஹோகந்தர பகுதியில் காரொன்றை நிறுத்துமாறு வழங்கப்பட்ட உத்தரவுகளை மீறி பயணித்த வாகனம் மீது நேற்று இரவு பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ஒரு கிலோ 800 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இச் சம்பவத்தின் போது தம்பதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கம்பஹா மாவட்டம் தெல்கொட பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஆண் மற்றும் 33 வயதுடைய பெண் ஆகியோர் ஆவர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மாலபே பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, குறித்த காரினை நிறுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
ஆனால், காரின் சாரதி உத்தரவுகளை கவனிக்கத் தவறி அதற்குப் பதிலாக வேகமாக பயணித்தமையினால் பொலிஸார் காரின் சில்லுகளை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகதைத் தொடர்ந்து, வாகனம் வீதியோரத்தில் உள்ள கம்பத்தில் மோதி நின்றது. இதன் போது பொலிஸார் வாகனத்தை சோதனையிட்டதில் ஒரு கிலோ 800 கிராம் கேரள கஞ்சா சாரதியின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது சந்தேக நபரின் வீட்டில் இருந்து மேலும் ஒரு கிலோ கேரள கஞ்சாவை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.