தமிழ் மக்களின் பாதுகாவலனாக மாவை சேனாதிராஜா திகழ்ந்தார் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கான தனது இரங்கல் செய்தியிலேயே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“மக்கள் சேவைக்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்த சிரேஷ்ட அரசியல் தலைவரான மாவை சேனாதிராஜாவின் மறைவை அறிந்து நான் மிகவும் வருத்தமடைகின்றேன்.
தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அவரது அர்ப்பணிப்பும் ஈடுபாடும் இலங்கை அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு முக்கிய ஆளுமையாகவும் திகழ்ந்த மாவை சேனாதிராஜா, இன ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்காகப் பாடுபட்ட அதேவேளையில், தனது மக்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளுக்காக ஒரு முன்னணிப் பங்கை வகித்தார்.
ஜனநாயக நடவடிக்கைகளுக்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் அமைதியான அரசியல் இயக்கத்தின் மீது அவருக்கு இருந்த உறுதியான நம்பிக்கை ஆகியவை நாடாளுமன்றத்தில் அவரது பல தசாப்த கால சேவைக் காலத்தில் சிறப்பாக பிரதிபலித்தது.
அவரது மறைவு அவரை அறிந்த மற்றும் அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
அவரது மறைவினால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டப் பாடுபடும் எதிர்கால தலைமுறையினருக்கு அவர் பற்றிய நினைவுகள் ஆசீர்வாதமாக அமைய வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன்” – என்றுள்ளது.