வடமேற்கு லண்டனில் உள்ள ஃபின்ச்லி (Finchley) பகுதியில், யூதப் பாடசாலை மாணவர்கள் மூவர் மீது கார் ஒன்றை ஏற்றி அவர்களை அச்சுறுத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 20ஆம் திகதி மாலை, ஹஸ்மோனியன் உயர்நிலைப் பாடசாலைக்கு அருகே மாணவர்கள் வீதியைக் கடக்கக் காத்திருந்தபோது, அதிவேகமாக வந்த ஒரு கருப்பு நிற கார், திடீரென நடைபாதையில் ஏறி அவர்கள் மீது மோத முயன்றுள்ளது.
மாணவர்கள் உடனடியாகப் பின்னோக்கி குதித்ததால் நல்வாய்ப்பாக எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினர்.
இந்த சம்பவம் குறித்துப் பெற்றோர்களுக்குக் கடிதம் எழுதியுள்ள பாடசாலை தலைமை ஆசிரியர், இது ஒரு யூத எதிர்ப்பு தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தை “மதவெறித் தூண்டல் காரணமாக நடத்தப்பட்ட தாக்குதல்” என்று வகைப்படுத்தியுள்ள லண்டன் பெருநகரக் காவல்துறை (Met Police), குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவரது தந்தை பிபிசி-யிடம் பேசுகையில், யூத அடையாளங்களுடன் இருந்த தன் மகனைத் திட்டமிட்டுத் அச்சுறுத்தவே ஓட்டுநர் இவ்வாறு செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
லண்டனில் யூதர்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், யூத சமூகத்தைப் பாதுகாக்க 100 கூடுதல் அதிகாரிகளைக் கொண்ட புதிய பாதுகாப்புப் படை அமைக்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் லண்டனில் 140 யூத எதிர்ப்பு வெறுப்புக் குற்றங்கள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.










