நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொலைகள் மற்றும் பாதாள உலக கோஷ்டியினுடைய கொலைகள் நாட்டின் பாதுகாப்பானது நிலை குலைந்து, மக்கள் அச்சம் கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
வவுனியா, அண்ணாநகர் பகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரை ஆதரித்து இன்று (23.04.2025) இரவு இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,”நாட்டில் ஜே.வி.பி எதிர்க் கட்சியாக இருந்த காலத்தில் நாட்டில் இவ்வாறான கொலைகள் இடம்பெற்ற போது அதற்கு எதிராக ஆட்சியாளர்கள் மீது பேசியதைக் கண்டோம். ஆனால் புதிய அரசாங்கத்தின் வருகையின் பின் அடிக்கடி கொலைகள், பாதாள உலக கோஷ்டியினுடைய கொலைகள் அடிக்கடி நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அண்மையில் கொல்லப்பட்டவர் சம்மந்தமாக எங்களுக்கு வேறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் தொடர்ச்சியாக இவ்வாறான கொலைகள் இடம்பெறுவது எதிர்காலத்தில் சுற்றுலாத்துறை பாதிக்கப்படுவதற்கும், இந்த நாட்டின் பாதுகாப்பு நிலை குலைந்து மக்கள் அச்சம் கொள்ளும் நிலை உருவாகுவதற்கும் வழிவகுக்கும்.
இந்த அரசாங்கம் அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்பில் இன்னும் மெத்தனப் போக்கோடு தான் நடந்து கொள்கிறார்கள். அதனையும் கவனத்தில் கொண்டு செயற்படுத்த வேண்டும். அதேபோல் தேர்தலுக்கு முன்னர் வழங்கிய பல வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளாக இருக்கின்றன.
அதுமட்டுமில்லாது, முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய, தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எல்லோரும் ஈஸ்ரர் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகளை கண்டு பிடிப்பதாகத் தான் வந்தார்கள். அதுவும் இந்த அரசாங்கம் ஏபரல் 21 இற்குள் குற்றவாளிகளை கண்டு பிடிப்போம், அறிவிப்போம் என்றார்கள். ஆனால் எல்லாம் செய்தியாகத் தான் இருக்கின்றதே தவிர, மக்கள் எதிர்பார்த்த எதிர்பார்ப்புக்கள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களும், சிறைகளுக்கு சென்று பதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களும் இந்த விடயத்தில் அராங்கத்தின் மீது பெரிய எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள்.
எதிர்க் கட்சியில் இருக்கும் போது பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராகப் பேசி வந்தார்கள். அந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை பன்படுத்தி சின்ன வேலைகளுக்கு கைது செய்கிறார்கள். குறிப்பாக போஸ்டர் ஒட்டுதல், முகப்புத்தகத்தில் பதிவேற்றுதல் என்பவற்றுக்கு இந்த சட்டத்தை பயன்படுத்துகிறது. ஆனால் உடனடியாக அதனையும் நீக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.




