வவுனியா விபுலானந்தா கல்லூரிக்கு விரைவில் விளையாட்டு மைதானம் பெற்றுக் கொடுக்கப்படும் என பிரதமரும், கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
வவுனியா ஊடகவியலாளர்களின் எற்பாட்டிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஷ்வரன் அவர்களின் ஒழுங்கமைப்பில் பாடசாலை அதிபர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் நேற்று முன்தினம் இரவு (20.04) பிரதமருடன் வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் தனிப்பட்ட சந்திப்பு ஒன்றை மேற்கொண்டனர்.
இதன்போது, வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் அமைந்துள்ள விபுலானந்தா கல்லூரியில் 2000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்ற போதும் அதற்கான ஒரு நிரந்தர மைதானம் இதுவரை இல்லை என்பது கவலைக்குரிய விடயம். மைதானத்திற்கான நிலம் ஒன்றினை கொள்வனவு செய்ய நீண்ட நாட்களாக பழைய மாணவர்கள், பெற்றோர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதும் இதுவரை அது கைகூடவில்லை.
கடந்த காலங்களில் அரச அதிகாரிகள், பல அரசியல்வாதிகள் ஆகியோருடன் கலந்துரையாடி மைதானத்தை பெற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதும் இதுவரை அது கைகூடவில்லை. தற்போதைய கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் என்ற அடிப்படையில் இப் பாடசாலையின் மைதானப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தருமாறு பாடசாலை நிர்வாகத்தால் பிரதமரிடம் இதன்போது கோரப்பட்டது.
பாடசாலை தொடர்பில் கேட்டறிந்த பிரதமர் மைதானப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும். மாணவர்களுக்கான மைதானத்தை விரைவில் பெற்றுத் தருவதாக இதன்போது உறுதியளித்தார்.
இச் சந்திப்பில் பிரதமருடன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன் மற்றும் செ.திகலகநாதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





