வவுனியா மாகரசபையின் ஆட்சி அதிகாரம் எமக்கு வழங்கப்பட்டால் அரசின் ஆதரவுடன் டிஜிற்றல் மாநகரமாக வவுனியாவை மாற்றியமைப்போம் என்று தேசிய மக்கள் சக்தியின் மாநகரசபை வேட்பாளர் லக்ஸ்சனா நாகராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று (19.04) அனுப்பியுள்ள செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மூவின மக்களும் வசித்துவரும் வவுனியா நகரம் வடக்கின் வியாபார மத்தியஸ்தலமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. அந்தவகையில் அதனை நவீனமுறையில் கட்டமைக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொருநாளும் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக கிராமங்களில் இருந்து நகரத்திற்கு வருகின்ற மக்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது. ஆனால் மாநகரம் என்றவகையில் அது மக்களின் தேவையினை முழுமையாக பூர்த்திசெய்யவில்லை. அடிப்படை குறைபாடுகள் பல உள்ளன.
அதனை மாற்றியமைக்க வேண்டும். புதிய டிஜிற்றல் முறைமையிலான ஒரு ஸ்மார்ட் சிற்றி ஒன்றை கட்டமைக்க வேண்டும். எனவே மாநகரசபையின் ஆட்சி அதிகாரத்தை மக்கள் எமக்கு வழங்கினால் அதனை நாம் நிச்சயம் நிறைவேற்றி காட்டுவோம். தற்போது நாட்டில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றது. அந்தவகையில் அரசின் ஆதரவுடன் எமக்கு அதனை செய்வது இன்னும் இலகுவானதாக இருக்கும்.
அத்துடன் எனது வட்டாரமான கடை வீதியில் உட்கட்டமைப்பு வசதிகள் பல மேம்படுத்தப்படவேண்டிய நிலையில் உள்ளது. குறிப்பாக கற்குழி தேக்கவத்தை பிரதான வீதி நீண்டகாலமாக புனரமைக்கப்படவில்லை. அதனை காப்பற் வீதியாக மாற்றுவதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளோம். தேக்கவத்தை பகுதியில் அமைந்துள்ள மைதானம் புனரமைக்கப்பட்டு மின்னொளியிலான மைதானமாக உருவாக்கும் திட்டமுன்மொழிவுகளை சமர்ப்பிக்கவுள்ளோம்.
இதேவேளை எனது வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக நிரந்தரமாக வசித்துவரும் மக்களிற்கு காணி உரிமங்கள் இதுவரை கிடைக்கவில்லை. நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சி என்ற வகையில் தேசிய மக்கள் சக்தி ஊடாக உரிய அமைச்சுடன் அணுகி அதனை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும்.
அதனோடு இணைந்து கற்குழி பகுதியில் புகையிரத கடவைக்கு அண்மையில் இருக்கின்ற குடும்பங்களுக்கு பொருத்தமான இடத்தில் வீட்டுத்திட்டம் ஒன்றை வழங்குவதற்கான செயற்பாடும் முன்னெடுக்கப்படும்.
எனவே மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக மத்திய அரசின் ஆதரவுடன் களம் காண்கின்ற எமக்கு மக்கள் ஆணை வழங்க வேண்டும். எமது கரங்களை பலப்படுத்த வேண்டும். அதன் மூலமே பலமான சபையினை அமைக்க முடியும்.
இவை வெறுமனே தேர்தல் காலத்தில் வழங்கப்படும் வாக்குறுதிகளாக மாத்திரம் இருக்காது. நான் தேர்தலில் வெற்றிபெறாவிட்டாலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக இந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றித்தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.