காந்தளாய் – 86 ஆவது மைல் கல்லில் இன்று காலை நடைபெற்ற கோரச் சம்பவம்
திருகோணமலை – கந்தளாய் அக்பர் பிரதேசத்தில், தனியார் பேருந்தும் இராணுவத்தின் பார ஊர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதி, ஏற்பட்ட விபத்தில், ஒருவர் பலியான அதேவேளை, 27 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த கோர விபத்து கந்தளாய் பிரதேசத்தில், அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 86வது மைல் கல்லில், இன்று(14) காலை இடம் பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
கண்டி, மாவனல்ல, உயன்வத்த பகுதியில் இருந்து, 26 உள்ளூர் சுற்றுலா பயணிகளுடன் திருகோணமலை நோக்கி வந்த, தனியார் பேருந்து ஒன்றும், திருகோணமலையிலிருந்து தென்பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த இராணுவத்தினரின் பார ஊர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
பேருந்தில் பயணித்த, 25 வயதான மாவனல்ல பிரதேசத்தைச் சேர்ந்த, முகமட் அஸ்கர் முகமட் அர்சாத் என்பவர் உயிரிழந்துள்ளதாகவும் 25 பயணிகளும் படுகாயங்களுடன், கந்தளாய் மற்றும் திருகோணமலை ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த விபத்து நடந்த இடத்தில், விபத்துக்குள்ளான பேருந்துக்கு பின்னால் சென்று கொண்டிருந்த கெப் வண்டி ஒன்று, அந்த பேருந்துடன் மோதியதால், அதில் பயணம் செய்த சிறுவர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அக்போபுர பொலிசார் தெரிவித்தனர்.



