வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க எல்லைக்குட்பட்ட கடற்பகுதிகளில் மனித வலுவற்று உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்கு சங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.
இதனை மீறி நபர் ஒருவர் அப்பகுதியில் உழவு இயந்திரம் கொண்டு தொழில் புரிந்துவருகின்றார்.
உடனடியாக இதை தடுத்து நிறுத்தி குறித்த கரைவலை வாடியை அகற்றுமாறு நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள், மருதங்கேணி பொலிஸ் நிலையம், கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் போன்றவற்றிற்கு அறிவுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நேற்று (4) காலை குறித்த சம்மாட்டி ஆழியவளை கடற்தொழிலாளர் சங்க எல்லைக்குட்பட்ட பகுதியில் உழவு இயந்திரம் கொண்டு தொழில் புரிந்த போது அங்கு மீனவர்கள் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.
அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொள்ள தவறும் பட்சத்தில் முறுகல் நிலை வன்முறையாக மாறக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக அப்பகுதி மீனவர்கள் அச்சம் தெரிவித்ததை தொடர்ந்து நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிசார் இணைந்து குறித்த சம்மாட்டிக்கு இறுதி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது
ஆழியவளை பகுதியில் உழவு இயந்திரம் கொண்டு கரைவலை தொழில் புரிவது தடையென்றும் மனிதவலுவை பயன்படுத்தி கரைவலை தொழில் செய்வதற்கு அனுமதி உண்டெனவும், சட்டத்திற்கு முரணாக உழவு இயந்திரம் கொண்டு கரைவலை தொழிலை தொடர்ந்து மேற்கொண்டால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்படுவீர்கள் என பொலிசாரால் எச்சரிக்கப்பட்டனர்
இதனை தொடர்ந்து குறித்த பகுதிக்குள் இனி உழவு இயந்திரம் கொண்டு கரைவலை தொழில் செய்ய மாட்டோமென கரைவலை சம்மாட்டியால் பொலிசாருக்கு எழுத்துமூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.


