நோன்பு பெருநாள் தினமாகிய இன்று(31) அல் அக்ஸா கல்லூரியில் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் தொழுகையினை தொடர்ந்து பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து பேரணி ஒன்று இடம்பெற்றது. இஸ்ரேலுக்கு எதிரான இக் கண்டணப் பேரணியில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பல கோசங்களையும் எழுப்பியிருந்ததுடன் இதனை திருகோணமலை மாவட்ட பள்ளிவாயல் சம்மேளன செயலாளர் எம்.எம்.மஹ்தி ஏற்பாடு செய்திருந்தார்.
இதன் போது பாலஸ்தீன கொடியை ஏந்தியவாறு பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கலந்து கொண்ட பலஸ்தீனத்துக்கு ஆதரவான மற்றுமொரு நிகழ்வும் கிண்ணியா குறிஞ்சாக்கேணி மைதானத்தில் இடம் பெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த எம்.எம்.மஹ்தி, பலஸ்தீன மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கிக் கொண்டு புனிதமான இந்த நாளிலே இருக்கிறார்கள். இஸ்ரேல் இன அழிப்பு விடயத்தை செய்து கொண்டிருக்கிறது. இதனை இந்த நாடு கண்டிக்க வேண்டும் என்பதுடன் ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும்.
அண்மையில் முஹம்மது ருஸ்தி எனும் இளைஞன் ஸ்டிக்கர் ஒட்டியதற்காக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே ஜனாதிபதி இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக இளைஞனை விடுதலை செய்ய வேண்டும். பாலஸ்தீன மக்களுக்காக அநுர அரசாங்கம் குரல் கொடுக்க வேண்டும். பாலஸ்தீனர்களுக்கு தனி நாடாக, தனி ராஜியம் என்ற அடிப்படையில் வழங்கப்படவேண்டும். இன அழிப்பை செய்யும் இஸ்ரேலியர்களுக்கு எதிராக மக்கள் கொந்தளிக்கும் நிலை காணப்படுகிறது. ஆகவே கைது செய்யப்பட்ட முஹம்மது ருஸ்தி விடுதலை செய்யப்படல் வேண்டும் என்பதை மீண்டும் இங்கு வலியுறுத்துகிறோம். தற்போது அரசாங்கமும் பலஸ்தீன மக்களுக்காக குரல் எழுப்ப வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.

