வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மண்டபத்தில் இன்றையதினம் மக்களுக்கான உதவி வழங்கல் ஒன்று இடம்பெறுவதாகவும் அதில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்துகொண்டதாகவும், ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளும், பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர். அவர்கள் வருகை தந்தபோது வேட்பாளர்கள் யாரும் அவ்விடத்தில் இருந்திருக்கவில்லை.
குறித்த பகுதியில் கட்சியின் கொடிகளும், வேட்பாளர்களும் இருந்ததாக முறைப்பாட்டாளரால் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
கள நிலவரங்களை ஆராய்ந்த அதிகாரிகள் இது குறித்து முறைப்பாடு ஒன்றினை வழங்குமாறும், பிரதேச சபையின் செயலாளருக்கும் இது குறித்து தெரியப்படுத்தி எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பதாகவும், இது குறித்து விசாரணைகள் செய்வதாகவும் தெரிவித்து விட்டு சென்றனர்.


