இந்தியாவில் இருந்து மீனவர் பேச்சுவார்த்தைக்கு வருகை தந்த மீனவ சங்கப் பிரதிநிதி ஒருவரைக் கைது செய்ய முற்பட்டமையால் அவர் உடனடியாகவே இலங்கையை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
இந்தியாவில் இருந்து இலங்கை மீனவர்களுடன் பேச்சு நடத்த இந்திய மீனவர்கள் ஐவர் இலங்கை வந்திருந்தனர்.
இவ்வாறு வருகை தந்திருந்த ஐந்து இந்திய மீனவர் பிரதிநிதிகளில் ஒருவரின் படகு கடந்த பெப்ரவரி மாதம் மன்னார் கடற்பரப்பில் கடற்படையினரால் பிடிக்கப்பட்டு அதில் இருந்த மீனவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதோடு படகு உரிமையாளர் முதலாம் எதிரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
முதலாம் எதிரியாக பெயர் குறிப்பிட்ட ஒருவரே இந்தியாவில் இருந்து வருகை தந்த ஐவரில் ஒருவர் என்பதனை அறிந்த மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் இந்த விடயத்தை தமது தலைமைக் காரியாலயம் ஊடாக அவசரமாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றது.
இதன் அடிப்படையில் படகின் உரிமையாளரும் இந்தியாவில் இருந்து வருகை தந்த இராமேஸ்வரம் விசைப்படகு உரிமையாளர் சங்கத் தலைவருமான ஜேசுராசாவைக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்துக்கு எழுத்தில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவு உரிய திணைக்களம் ஊடாக மன்னார் நீதிமன்றத்தின் கவனத்துக்குச் செல்ல முன்பு இந்தியாவில் இருந்து வருகை தந்த மீனவர் குழுவின் கவனத்துக்குச் சென்றதனால் நேற்று மாலை விமானத்தில் ஜேசுராசா அவசரமாக இந்தியா திரும்பியுள்ளார்.