ஒட்டுசுட்டான் பகுதியில் சுகாதார பரிசோதகர்கள் நடாத்திய திடீர் சோதனை நடவடிக்கையில் மனித நுகர்வுக்கு ஒவ்வாத உணவு பொருட்கள் அழிக்கப்பட்டதோடு, உணவுக்கடைகள் மூடப்பட்ட சம்பவம் இன்றையதினம் (29.03.2025) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள உணவகங்களில் ஒட்டுசுட்டான் சுகாதார பரிசோதகர்களான லோஜிதன், டிலக்சன், நதிருசன் ஆகிய பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இணைந்து நடாத்திய திடீர் சோதனை நடவடிக்கையின் போது உணவு கடையொன்றிலிருந்து 10kg ரொட்டி, றோல்ஸ் போன்ற மனித நுகர்வுக்கு ஒவ்வாத உணவு பொருட்கள் கைப்பற்றப்பட்டு சுகாதார பரிசோதகர்களால் அழிப்பு செய்யப்பட்டிருந்தது.
மேலும் குறித்த கடை சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வந்துள்ளது. இதனால் கடையை பூட்டி குறித்த கடையை சுகாதாரமான முறையில் இயங்க நடவடிக்கை எடுக்க இன்றிலிருந்து அவர்களுக்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இல்லையேல் குறித்த கடை உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.








