பிரபல தொழிலதிபர் எலோன் மஸ்க் சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தை தனது சொந்த நிறுவனமான எக்ஸ் ஏ.ஐ. (xAI) என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விடயத்தை எலோன் மஸ்க் நேற்று இரவு (28) தனது எக்ஸ் தளத்தில் உத்தியோகப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தம் பணப்பரிமாற்றம் இல்லாமல் முழுமையாக பங்கு பரிவர்த்தனை மூலம் நடைபெற்றுள்ளதாகவும் இதன் மதிப்பு சுமார் 33 பில்லியன் டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“எக்ஸ் ஏ.ஐ. நிறுவனம் எக்ஸ் தளத்தை வாங்கியுள்ளது. இந்த ஒப்பந்தம் எக்ஸ் ஏ.ஐ. நிறுவனத்தை 80 பில்லியன் டொலர்களாகவும், எக்ஸ் தளத்தை 33 பில்லியன் டொலர்களாகவும் மதிப்பிடுகிறது.
எக்ஸ் மற்றும் எக்ஸ் ஏ.ஐ. ஆகியவற்றின் எதிர்காலம் ஒருங்கிணைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த இணைப்பு, எக்ஸ் ஏ.ஐ.யின் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு திறன்களை எக்ஸ் தளத்தின் பரந்த பயனர் தளத்துடன் இணைத்து, சிறப்பான, ஆற்றல் மிகுந்த சேவையை மக்களுக்கு அளிக்க முடியும் ” என மஸ்க் தெரிவித்துள்ளார்.