மன்னார் மாவட்டத்தில் அரச மற்றும் தனியார் காணிகளை அபகரிப்பு செய்வதாக கடந்த புதன்கிழமை (26) செய்தியாளர் சந்திப்பினை வைத்து மன்னார் பேசாலையினை சேர்ந்த பிரியதர்ஷினி ரொட்ரிகோ என்ற பெண் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு எதிராக சேக் முஹம்மத் ரிசான் சேக் அமானி என்பவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தமது சட்டத்தரணி அயிஸ் மன்த கயான் சகிதம் நேற்று (27) மாலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்து முறைப்பாடு செய்துள்ளார்.
முஹம்மது ரிசான் சேக் அமானி இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் –
மேற்படி பெண்மணியின் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
எனது தந்தை காணி கொள்வனவு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகின்ற ஒருவராக இருந்தார்.
நான் கடந்த 10 வருட காலமாக மேற்படி தொழில் செய்து வருகிறேன்.
என்னுடைய நேர்மையான தொழில் முன்னேற்றத்தை சகித்துக் கொள்ள முடியாத சிலர் இவ்வாறு எனக்கு எதிராக சமூக வலைதளங்களில் போலி பிரச்சாரங்களை செய்து வருகின்றனர்.
இது தொடர்பில் நான் எனது சட்டத்தரணி சகிதம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளேன்.
இதற்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
உண்மை,நேர்மை நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது .குற்றப் புலனாய்வு திணைக்களம் இது தொடர்பில் எனக்கு நியாயத்தை பெற்று தரும் என்றும் அமானி இதன்போது கூறினார்.