இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாளான ஜூன் 2ஆம் திகதி தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெறும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இசைஞானி இளையராஜா இசையை உலகமெங்கும் இருக்கும் இரசிகர்கள் ரசிக்கிறார்கள். அந்த இசையை தமிழ்நாடும் இரசிக்க வேண்டும். எனவே தமிழ்நாடு அரசு இளையராஜா சிம்பொனியை இசையை இசைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சட்டசபை உறுப்பினர் சிந்தனை செல்வன் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நானும் இளையராஜாவை சந்திக்கும் போது இதே கோரிக்கையை முன்வைத்தேன்.
ஆனால் 400இற்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் ஒரே நேரத்தில் அணிவகுப்பது என்பது தற்போது சாத்தியமில்லை. ஆனால் விரைவில் அதை கண்டிப்பாக செய்வதாக இளையராஜா உறுதி அளித்துள்ளார்.
மேலும், தமிழக அரசின் சார்பில் லண்டனில் சிம்பொனி அரங்கேற்றியதற்காகவும், இளையராஜாவின் 50 ஆண்டு கால திரையுலக பணிக்காகவும் அவருக்கு பாராட்டு விழா ஜூன் மாதம் 2ஆம் திகதி நடத்தப்படும் என்று அறிவித்தார்.